அமித்ஷா கருத்தை வரவேற்கிறேன்.. இபிஎஸ் பிரதமராக வரவேண்டும் – தம்பிதுரை விருப்பம்

June 12, 23

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று அதிமுக எம்.பி தம்பிதுரை விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என்கிற அமித்ஷா கருத்தை வரவேற்கிறேன். அமித்ஷா கூறியதற்கு ஏற்ற நபர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘மாணவர்கள் நன்கு படித்து கல்வியில் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

அதேபோல் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதிகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மேலும் நேற்றைய தினம் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என பேசியது தமிழகத்திற்கு வரவேண்டிய பெருமை.

கடந்த காலத்தில் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராஜாஜி, காமராஜர், மூப்பனார் ஆகியோருக்கு கிடைக்க வேண்டியது தள்ளிப்போனது. அதற்குக் காரணம் திமுக என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் வைத்தார். அதிமுக நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பெயர் வைத்தார் எம்ஜிஆர். அதற்கு ஏற்ப மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் பிரதமராக வாய்ப்பு வந்தது. காலத்தின் கட்டாயத்தால் அவை மாறிவிட்டது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வர மாட்டார்களா என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது. உலக அளவில் மாபெரும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி தான் தேர்தலை சந்திக்கும். 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது அதிமுகவின் குறிக்கோள்.

தமிழர் பிரதமராக ஆக வேண்டும் என அமித்ஷா கருத்தை வரவேற்கிறோம். நன்றி தெரிவிக்கிறோம். அமித்ஷா தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என சொல்லிவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பிரதமராக வருவார் என தெரியவில்லை.

அப்படி வரும் பட்சத்தில் அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். ஜெயலலிதா ஆசி பெற்றவர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளன.

18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் திமுக 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. அப்போது மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன வந்தது என பட்டியல் சொல்லட்டும். பிறகு பாஜக 9 ஆண்டுகால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூறுகிறோம்.

மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை மத்திய அரசே முழுவதும் நடத்த உள்ளது தொடர்பான கேள்விக்கு, ’மத்திய அரசின் இது போன்ற செயல்பாடுகளுக்கு அடிப்படை காரணம் திமுக தான். 1976 ஆம் ஆண்டு அவசர காலத்தில் கல்வித்துறையை மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான். அதற்குப்பின் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தது. மத்திய பட்டியலில் இருந்த கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு கொண்டுவர திமுக முயற்சி செய்தார்களா? அப்படி செய்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது.

மாநில சுயாட்சி என மு.க.ஸ்டாலின் பேசுவது கண் துடைப்பு, கல்வித்துறையின் எல்லா அதிகாரமும் சென்றதற்கு காரணம் திமுக தான். நீட் தேர்வு நடத்துவது மத்திய அரசு. அப்போது கலந்தாய்வை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக தான்.

அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. என்னுடைய தனிப்பட்ட கருத்து மாநில சுயாட்சிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. நீட் தேர்வு கூடாது. மாணவர்கள் சேர்க்கை மற்றும் கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை. அதனை பாஜக பறிப்பது கண்டனத்திற்குரியது.

அதிமுக கையெழுத்து போட்டதால் மின்கட்டண உயர்வு என முதலமைச்சர் பேசுகிறார். அவருக்கு திறமை இருந்தால் உதய் திட்டத்தில் இருந்து வாபஸ் பெறட்டும். உதய் திட்டத்தில் குறைகள் இருந்தால் அந்த திட்டத்திலிருந்து பின்வாங்கட்டும்’ என்று தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *