குட் பேட் அக்லி திரைப்படம் ஓடியதற்கு காரணம் அஜித்தான் என கங்கை அமரனுக்கு அவரது புத்திரன் பிரேம்ஜி , பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 10 -ஆம் தேதி ,அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. விமர்சனங்கள் குறை சொன்னாலும் இந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அவர் கோபம் அடைந்தார்.தன்னிடம் உரிய அனுமதி பெறாமல், தன்னுடைய பாடல்களை ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.
அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதால், தனக்கு ரூ .5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நோட்டீசில் ராஜா கூறியிருந்தார்.
ஆனால், ‘’இந்த பாடல்களுக்கு இப்போது உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே அவற்றை பயன்படுத்தியதாக ‘குட் பேட் அக்லி’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்த மோதலில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், மூக்கை நுழைத்தார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்கு, இளையராஜாவின் பாடல்கள் தான் காரணம் என்று அமரன் தெரிவித்திருந்தார்.
“ரூ. 7 கோடி கொடுத்தும் உங்கள் இசையமைப்பாளரிடம் இருந்து வாங்க முடியாத இசையை, எங்களிடம் இருந்து எடுத்து பெயர் கூடா போடாமல், வரவேற்பை பெற்றுள்ளீர்கள். அந்த இசையில் எங்களுக்கும் பங்கு உண்டுதானே? அதற்கான கூலி எங்களுக்கு வரணும் தானே?
எங்களுக்கு பணத்தாசை இல்லை. எங்களிடம் செலவு செய்ய முடியாத அளவில் பணம் கொட்டிக் கிடக்கிறது. அனுமதி கேட்டால் ராஜா அண்ணன் உடனே கொடுத்து விடுவார். அஜித் படம் என்பதால் கேட்கவில்லை.
எங்கள் இசை என்பதால் கேட்கிறோம். முடிந்தால் உங்கள் இசையமைப்பாளரை வைத்து இப்படி ஒரு பாடலை போட சொல்லுங்கள்” என்று படப்போடுவார்த்தைகளை கொட்டினார், அமரன்.
இந்நிலையில், கங்கை அமரன் கருத்துக்கு அவர் மகன் பிரேம்ஜி எதிர்ப்பு தெரிவித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அவர் சொன்னது :
“காப்புரிமை விவகாரம் தொடர்பாக தன்னுடைய அண்ணனுக்கு, எனது தந்தை ஆதரவு அளித்துள்ளார்.
இதுவே என்னுடைய சகோதரர் குறித்து யாராவது பேசினால், அவருக்கு உறுதுணையாக நான் நிற்பேன். அந்த வகையில் தான் என் தந்தை பேசியிருந்தார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறி விட முடியாது.
உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அப்படம் வெற்றி பெற்றது” என பிரேம்ஜி தெரிவித்தார்.
கங்கை அமரனுக்கு, அவரது மகன் பிரேம்ஜியே பதிலடி கொடுத்ததால், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
—