ராகுல் காந்தி சிறைத் தண்டனை நிறுத்தம், எம்.பி,பதவி தப்பியது, உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

 

ஆகஸ்டு, 04-

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நீடிக்கிறது. அவர் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பூர்ணவ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுக் தண்டனை விதித்ததால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

சூரத் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அந்த மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிராக ராகுல் காந்தி  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுடி செய்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்  காந்தி உடனடியாக சிறை செல்ல நேரிடும், அவர்ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும் உருவானது.

இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் வழங்கிய தீர்ப்பில் தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

“அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது; ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா? ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? அவதூறு வழக்கை ஒழுக்கக் கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது” இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் ராகுல் காந்தி குற்றவாளி என்ற கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் எம்.பி.யாக தொடர்கிறார், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் தொடங்கி நாடு முழுவதும் அந்தக் கட்சித் தொண்டார்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *