என்னதான் செய்கிறார் அஜித்? கவலையில் ரசிகர்கள்…

ஆகஸ்டு – 28

அல்டிமேட் ஸ்டார் அஜித், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புதிராகவே இருந்து வருகிறார். பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் பேட்டி அளிப்பதில்லை. தான் நடிக்கும் பட விழாக்களிலும் பங்கேற்பதில்லை.பொது வெளியில் தோன்றுவதையும் தவிர்த்து வருகிறார். திடீரென்று வெளிநாடுகள் செல்கிறார்.அங்கு போய் பைக் ஓட்டுகிறார்.அஜித்தின் சாகசங்களை,அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, பத்திரிகைகளுக்கு அவ்வப்போது கொடுக்கிறார்.

அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆகி 8 மாதங்கள் கடந்து விட்டன. துணிவு வெளியான அதே நாளில் விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆனது.அதனைத்தொடர்ந்து விஜய் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார்.அடுத்து வெங்கட் பிரபு படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

ஆனால் அஜித்?

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது.இருவருக்கும் பிரச்சினை.’அஜித் நடிக்கும் வசன காட்சிகளை மட்டும் நான் இயக்குவேன். பாடல்கள், சண்டை காட்சிகளை வேறு வேறு ஆட்கள் இயக்குவார்கள்’ என நயன்தாராவின் கணவர் சொல்ல, அந்த படத்தையே டிராப் செய்தார்,அஜித். அஜித்தை வைத்து மகிழ்திருமேனி ஒரு படம் இயக்குவதாக இருந்தது.லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்துக்கு;விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.’கதை ரெடி.ஆகஸ்டில் ஷூட்டிங் ஆரம்பம்’ என லைகா தித்திப்பாக கூறியது.

ஆனால் கோடம்பாக்கத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் கசப்பாகவே உள்ளது. ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 10 மாதமாக அஜித்துக்கு ஷுட்டிங் இல்லை. இப்போது அவர் என்னதான் செய்கிறார்? வெளிநாட்டில் பைக் ஓட்டியவர் சென்னையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

தனது மனைவி ஷாலினி மற்றும் பள்ளிக் குழந்தைகளோடு ஜாலியாக அஜித் ,தினமும் சைக்கிளிங் சென்று வருகிறார். சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகின்றன. அஜித்மகன் ஆத்விக்கும் அப்பாவோடு சைக்கிளில் சுற்றுகிறார்.

‘ஒன்னுமே புரியல உலகத்தில’ என அஜித் ரசிகர்கள் கவலையோடு பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *