கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியை மாற்றச்சொல்லி, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வலியுறுத்தியும் ,கவிஞர் மறுத்து விட்டார். அந்த பாடல் என்ன?
1962 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் ‘பார்த்தால் பசி தீரும்’.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, சவுகார் ஜானகி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏ.சி.திரிலோகச்சந்தர் கதை எழுத, ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார்.
சிவாஜியும், ஜெமினியும் ராணுவத்தில் வேலை செய்து வரும் நிலையில், அங்கு நடத்த போரில் குண்டடிப்பட்டு இருவரும் ஒரு மலை கிராமத்தில் தஞ்சம் அடைகின்றனர்.
அப்போது அந்த கிராமத்து பெண்ணான சாவித்ரியை காதலித்து ஜெமினி கணேசன் திருமணம் செய்துகொள்கிறார்.
அடுத்து நடந்த போரில், ஜெமினி, சிவாஜி இருவரும் அந்த கிராமத்தில் இருந்து தப்பிக்கும்போது பிரிந்து விடுகிறார்கள்.
சில மாதம் கழித்து ஜெமினி கணேசன் தனது மனைவியை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறார்.
கிராமத்தில் இருப்பவர்கள், குண்டுவெடிப்பில் அனைவரும் இறந்துவிட்டதாக சொல்ல , சென்னை வரும் ஜெமினி கணேசன், உறவினர்களின் வற்புறுத்தலால் சவுகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார்.
ஜெமினி என்ன ஆனார் என்பதை தெரிந்துகொள்ள மீண்டும் அந்த கிராமத்திற்கு வரும் சிவாஜி கணேசன், இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட சாவித்ரி கண்பார்வை இல்லாமல், ஜெமினியின் குழந்தையுடன் இருப்பதை பார்த்து, ஜெமினியுடன் சேர்த்து வைக்க அவரை அழைத்து வருகிறார்.
ஜெமினிக்கு இன்னொரு திருமணம் ஆகிவிட்டது.
அவரிடம் சாவித்ரி உயிருடன் இருக்கிறார் என்பதை சொல்ல முடியாது. அதேபோல் கண் தெரியாத சாவித்ரியிடமும் ஜெமினிக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது.
இதனால் என்ன செய்வது என தெரியாமல் சிவாஜி விழித்துக்கொண்டிருப்பார். சவுகார் ஜானகியின் தங்கையான சரோஜாதேவி மீது சிவாஜிக்கு காதல்.
கண் தெரியாத சாவித்ரியை, சிவாஜியின் மனைவி என்று நினைத்துக்கொள்ளும் சவுகார் ஜானகி , சிவாஜியை திட்டி விடுகிறார்.
எங்கும் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சிவாஜி, அழுது புலம்பி பாடும் பாடல் ‘உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை’’.
‘இந்த பாடலின் பல்லவியில் ‘ஆமை ஊமை’ என்று அபசகுணமாக உள்ளது’- இதை மாற்றுங்கள் என்று சொல்கிறார் , ஏவிஎம்-
ஆனால் கண்ணதாசன், இது மக்களுக்கு பிடிக்கும் மாற்ற முடியாது’ என சொல்லி விட்டார்.
இதை கேட்டு கோபமான ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ‘நான் சொன்னால் நீங்கள் மாற்ற வேண்டியதானே, இந்த பல்லவி எனக்கு பிடிக்கவில்லை ‘என்று கண்ணதாசனிடம் சொன்னார்.
ஆனால் கண்ணதாசன், ‘இந்த பாட்டுக்கு இதுதான் பல்லவி. அதை மாற்ற வேண்டும் என்றால் இந்த பாடலே வேண்டாம். வேறு யாரையாவது வைத்து எழுதிக்கொள்ளுங்கள்’ என்று கோபமாக சொல்லிவிட்டார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அரைமனதுடன் ஒப்புக்கொள்கிறார்.
இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
—