ஒடிசாவில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் – இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு!!

June 04, 23

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பத்ரக்கில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஒடிசா மாநிலம் பத்ரக்கில் இருந்து சென்னைக்கு இன்று பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

இந்த ரயில், கட்டாக், புவனேஷ்வர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நின்று செல்லும் எனவும் குறிப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயிலில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் வகையில் ஒரு பெட்டி இணைக்கப்படும் எனவும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *