கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர்.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர்.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பெற்றி ஆட்சி கட்டிலில் அமர தீவிர முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பாவை முக்கிய முகமாக பாஜக மேலிடம் முன்னிறுத்தி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலையும் மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா என மூத்த தலைவர்களும் தீவிர பரப்புரையில் உள்ளது. அதேவேளை, எதிர்கட்சியான காங்கிரஸ் தரப்பும் பாஜகவுக்கு கடும் சவாலை தருகிறது. மாநில பாஜக அரசு மீது அதிருப்தி இருப்பதால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் உள்ளிட்ட மாநில தலைவர்களும், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தீவிர யுக்திகளை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கர்நாடாகாவில் இன்று எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். பெங்களூரு புகழேந்தி தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தங்களின் ஆதரவை பாஜகவுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதாரவாளர்கள் கர்நாடகா பாஜகவை சந்தித்து ஆதரவு தருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக மாநில பாஜக மற்றும் எடப்பாடி தரப்பு இடையே குழப்பமான சூழல் நிலவிவரும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தற்போது எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். இதற்கு முந்தைய தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சில தொகுதிகளில் அஇஅதிமுக தனித்து போட்டியிட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *