கேரளா சுற்றுலா படகு விபத்து… படகின் உரிமையாளர் கைது!

மலப்புரம்: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து முதல்வர் பினராயி விஜயன் ரூ.10 லட்சமும் பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது தூவல் தீரம் கடற்கரை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கழிமுகம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் ‘அட்லான்டிக்’ படகு சென்று கொண்டிருந்தது. அது திடீரென நீரில் கவிழ்ந்தது. படகில் அப்போது 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. நீரில் மூழ்கி பலர் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்திய கடலோரக் காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை வரை நடந்த மீட்புப் பணியில் 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில், இறந்த 22 பேரின் அடையாளமும் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடலில் மூழ்கியவர்களை மீட்க அனைத்து அரசு அமைப்புகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை மட்டுமன்றி கப்பற்படை உதவியையும் கேட்டுள்ளோம். படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பது சரியாக தெரியாததால், தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

முதல் கட்ட விசாரணையில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், படகை இயக்கும் போதே பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சரிந்ததாகவும் உயிர்த் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர். மேலும், உயிர்க் காக்கும் கவச உடைகளும் பயணிகளுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதும் விபத்துக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த படகு உரிமையாளர் நாசர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், கொச்சியில் அவரது சகோதரர் சலாம் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் முகமது ஷபி ஆகியோரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து நாசரின் மொபைல் போன் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சம்பவ இடத்தை முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் படகு விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அத்துடன், ‘‘இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 8 பேரின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்’’ என்றும் அவர் அறிவித்தார். படகு மூழ்கி 22 பேர் உயிரிழந்ததால், நேற்று அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

தகவல் அறிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *