‘கைதி’ திரைப்படம் வெளிவந்து 5 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ‘கைதி ‘இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதன் நாயகன் கார்த்தி.
வெற்றிப்படம் கொடுக்கும் நடிகர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் . அதன் இரண்டாம் பாகம்.
‘பாட்ஷா’ ஓடியதும், ‘எப்போ பார்ட் -2’ என ரஜினியை துளைத்து எடுத்தார்கள்.
அவர் ‘ நோ’ என உறுதியாக நின்றார். தனது படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்லை என்பது ரஜினியின் கொள்கை.
முதன் முறையாக ‘ஜெயிலர் -2’ வில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கார்த்தி முன்னணி கேரக்டரில் நடித்த கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக அமைத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் ,உருவாக்கி இருந்தார். பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். ஹீரோவுக்கு ஜோடியே கிடையாது.
இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.அங்கும் வசூல் அள்ளியது.
‘கைதி இரண்டாம் பாகம் எப்போது ?’ என நான்கு ஆண்டுகளாக கார்த்தியிடமும், லோகேஷ் கனகராஜிடமும் , ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இப்போது விடை கிடைத்துள்ளது.
லோகேஷ் ,இரு தினங்களுக்கு முன், தனது பிறந்த நாளை கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கார்த்தியை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்.
அப்போது, அவருக்கு காப்பு ஒன்றை அணிவித்தார் கார்த்தி.
கைதி படத்தில் கார்த்தி, கையில் காப்புடன் அனைத்து காட்சிகளிலும் இருப்பார். அதன் நினைவாக , லோகேஷுக்கு காப்பு மாட்டி இருக்கலாம்.
அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து ‘தில்லி ரிட்டன்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் ‘கைதி 2’ படத்தில் இணைந்து பணிபுரிய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார், கார்த்தி.
‘கைதி 2’ படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என். நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
சீக்கிரம் வா, ‘பையா’ !
—