செந்தில் பாலாஜியை விடுவதாக இல்லை அமலாக்கத் துறை..

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்துள்ளது.

சட்ட விரோதப் பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட  செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் உள்ளார். உடல் நிலையைக் கருதி அவரை சிறைக்கு கொண்டு செல்லாமல் மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை தரவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அவரிடம்  8 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நகல் நீதிமன்ற அலுவலர்கள் மூலம் செந்தில் பாலாஜிக்கு அன்றே நேரில் வழங்கப்பட்டது. அவரும் உத்தரவு நகலை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்ற கேள்வித் தொகுப்பையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயார்நிலையில் வைத்திருந்தனர்.

ஆனால் நீதிமன்றம் அனுமதி அளித்த 8 நாட்களில் முதல் நாளான 16-ந்தேதி அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவு நகலை அமலாக்கத்துறையினர் பெறுவது போன்ற நடைமுறைகளினால் அன்று இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. அதன் பிறகு 17,18,19 ஆகிய நாட்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மருத்துவமனை பக்கமே செல்லவில்லை.

விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ள அவரிடம் விசாரணை நடத்தினால் அது முழுமையாக இருக்காது என்று அமலாக்கத்துறை கருதியதே இதற்கு காரணமாக தெரிகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்று அனுமதியளித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்த மனுவில் கேட்டுக் கொளள்ப்பட்டு உள்ளது. இந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. புதன் கிழமை அமலாக்கத் துறை  மனு மீது விசாரணை நடை பெற உள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *