செந்தில் பாலாஜி காட்டில் மழை, சிறையில் அடைப்பதில் மீண்டும் குழப்பம்.

செந்தில் பாலாஜி என்றாலே குழப்பந்தான் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அவரது மனைவி மேகலா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றனர். இதனால் வழக்கில் முடிவு ஏற்படாமல் தலைமை நீதிபதிக்கு செல்கிறது. அவர் மூன்றாவதாக நீதிபதி ஒருவரை நியமித்து வழக்கை விசாரிக்க உத்தரவிடுவார். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்படுவரா அல்லது விடுவிக்கப்படுவார என்பது தெரியவரும்.  அது வரை செந்தில் பாலாஜி இப்போது உள்ளது போன்று நீதிமன்றக் காவலிலேயே தொடருவார்.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை கொடுப்பதாக கூறி பணம் வசூலித்த வழக்கில் கடந்த 13- ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவவில் உள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதால் உடனே விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்புமே கடுமையான வாதங்களை முன் வைத்ததால் வழக்கு விசாரணை கடந்த வாரம் சூடாக நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்டுத்திய வழக்கில் இன்று காலை தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி நிஷா பானு தமது தீர்ப்பில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்ட விரோதம், எனவே அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

நீதிபதி பரத சக்கரவர்த்தி தமது தீர்ப்பில் செந்தில் பாலாஜியை சிறைக்கோ அல்லது மருத்துவனைக்கோ மாற்ற வேண்டும். அவர் சிகிச்சை பெறும் நாட்களை நீதிமன்றக் காவல் நாட்களாக கருத முடியாது என்று தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வகையில்  காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்பதும் பரத சக்கரவர்த்தியின் தீர்பபாகும்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால் இந்த வழக்கு முறைப்படி தலைமை நீதிபதி கவனத்திற்கு செல்கிறது. அவர் மூன்றாவதாக ஒரு நீதிபதியை நியமித்து வழக்கை விசாரிக்கச் சொல்வார். அவர் வழங்கும் தீர்ப்பையும் சேர்த்து பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல வேண்டுமா அல்லது விடுவிக்கப்பட வேண்டுமா என்பது தெரியவரும். அது வரை இப்போது உள்ள நிலையே தொடரும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *