நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி – தற்கொலையா? என போலீசார் விசாரணை

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5வயது மகனும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர்.

இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார், கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இறந்தவர் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகரை சேர்ந்தவர் சிவா என்ற உச்சிமாகாளி (வயது 32). கட்டிட தொழிலாளியான இவரின் 5 வயது குழந்தை முத்துசெல்வன் என்பது உறுதியானது.

நேற்றிரவு சிவா தனது குழந்தை முத்துசெல்வனை அழைத்துக்கொண்டு அன்னைநகர் ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை பார்க்க சென்றார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சிவா, குழந்தை முத்துசெல்வன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்துள்ளது. இருப்பினும், சிவா, அவர் தனது குழந்தையுடன் தற்கொலை ஏதும் செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *