கிராமத்து தெருக்களையும், வயல்களையும் படப்பிடிப்பு தளமாக்கியவர் ,’இயக்குனர் இமயம்’ பாரதிராஜா .
கிராமம், நகரம், கிரைம் த்ரில்லர் என பல்வேறு தளங்களில் இயங்கியவர்.
செல்லூலாயிடில் , காதல் ஓவியம் வரைந்த மகா கலைஞன்.
முதல் மரியாதை படத்தில் சத்யராஜுக்கு கவுரவ வேடம் கொடுத்த பாரதிராஜா, தனது அடுத்த படமான ‘கடலோரக்கவிதைகள்’ படத்தில் அவரை ஹீரோ ஆக்கினார்.
அதனை முடித்து விட்டு, அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஒன்று; ரஜினியுடன் ‘கொடி பறக்குது’.
இன்னொன்று _: சத்யராஜுடன் ‘வேதம்புதிது’.
இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆயின.
1987 ஆம் ஆண்டு வெளியான ‘வேதம் புதிது’ ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் எடுக்கப்பட்டது.
வழக்கமாக பாரதிராஜா,திரைப்படத்துக்கு இளையராஜா இசை அமைப்பார். இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தேவேந்திரனிடம் இசையமைக்கச் சொன்னார். அவரும் அற்புதமான பாடல்களை கொடுத்தார்.
இந்த படத்தில் பாலுத்தேவர் என்ற கேரக்டரில் நடித்த சத்யராஜ் தனது மருமகள் அமலாவின் தம்பியான சிறுவனை தனது தோளில் தூக்கிக்கொண்டு ஆற்றில் நடந்து செல்வார்.
அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், அந்த சிறுவன், ‘பாலு உங்க பெயர் ..தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா ? என்று சத்யராஜூ வை பார்த்து கேட்பார்.
அப்போது சத்யராஜ் தனது கன்னத்தில் யாரோ ஒருவர் அறைந்தபோன்ற உணர்வை கொடுத்திருப்பார். இந்த காட்சிக்கு தியேட்டர்களில் கைத்தட்டல் காதை பிளந்தது.
சாதி வேண்டாம் என்ற கருத்தை கடுமையாக வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட வேதம் புதிது திரைப்படத்திற்கு பல தடைகள் வந்தன.
கதையும் வசனங்களும் சர்ச்சையாக இருப்பதாக சொன்ன, சென்சார் குழுவினர், இந்த படத்திற்கு சென்சார் கொடுக்க முடியாது என்று கை விரித்து விட்டனர்.
இதனால் ஆவேசமான பாரதிராஜா,, ‘இந்த படத்தின் ஃபிலிம் ரோல்களை சாஸ்திரி பவனில் வைத்து எரிப்பேன் – அப்போது நீங்கள், தமிழ்நாடு முழுவதற்கும் பதில் சொல்ல வேண்டி வரும். எனக்கு இரு தினங்களில் சென்சார் சான்றிதழ் தேவை’’ என்று கர்ஜித்தார்.
அதன்பிறகே வேதம் புதிது படத்துக்கு சர்டிபிகேட் , கொடுத்தது, தணிக்கை வாரியம்.
்்