கருணாநிதியும்,எம்.ஜி.ஆரும் எப்போதுமே ‘நண்பர்கள்.!
எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரைஉலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது. அதிமுகவை ஆரம்பித்து , எம்.ஜி.ஆர்.ஆட்சியை பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது.
இவர்கள் நட்பின் ஆழத்தை ஊடகங்கள் ,பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. தங்கள் இடையேயான அன்பை, சட்டசபையில் எம்.ஜி.ஆர். ஒரு முறை பதிவு செய்துள்ளார்.
1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது:
‘’ கலைஞர் ஒரு விஷயத்தை சொன்னார்.’ என்னைப்பற்றி முதலமைச்சருக்கு தெரியும் –அவரை பற்றி எனக்கு தெரியும் ‘என அவர் கூறினார்.அவர் சொன்னதைத்தான் நானும் சொல்ல வேண்டியிருக்கிறது
என்னைப்பற்றி அவர் புரிந்து கொண்டிருக்கிறார்-அவரைப்பற்றியும் நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன் –ஒருவருக்கொருவர் இடையில் கொஞ்சகாலம் பிரிந்திருந்தோம் –என்றாலும் ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல் இல்லை.
‘உமாநாத், இங்கே சொன்னார்- ‘ஏன் ஒருவருக்கொருவர் பெயரைக்கூட சொல்வதில்லை’ என அவர் கேட்டார் –பெயர் சொல்வது மட்டுமன்று –ஒருவருக்கொருவர் ‘ஆண்டவனே’என்று கூப்பிட்டுக்கொள்வதும் உண்டு
பெயரைச்சொல்வது முக்கியமல்ல –பொதுப்பிரச்சினையில், பொதுத்தன்மையில், மொழிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளில் நாங்கள் நிச்சயமாக அண்ணா அவர்களின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:
‘’காவல்துறைக்கு ( தனது ஆட்சியில் ) எந்த அளவுக்கு சம்பளங்களை உயர்த்தி இருக்கிறோம்’என எதிர்க்கட்சி தலைவர் ( கருணாநிதி ) இங்கே பேசினார்-அவர் சொல்லும்போது நான் ஒன்றை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.
காலஞ்சென்ற என் மனைவியின் தமையனார் ,ஒரு போலீஸ்காரர்- அவர் 7, 8 குழந்தைகளுக்கு தந்தை –அவர் வாங்கிய சம்பளம் போதாமல் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நேரில் கண்டறிந்தவன் நான் –ஆகவே, அப்படிப்பட்ட ஊதியம் உயர்த்தி தந்த , நல்ல காரியத்தை , எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் கலைஞர் செய்துள்ளார்.
இதற்காக நான் ,சுயநலத்தில்,தனித்து அதை வரவேற்கிறேன் – அந்த நல்ல காரியத்தை செய்த அவர்கள் ( (கலைஞர்) அவர்கள் வாழட்டும் என்றார் எம்.ஜி.ஆர்.