பொன்முடி மீது அடுக்கடுக்கான குற்றங்கள்.. அமலாக்கத்துறை விளக்கம்.

ஜூலை, 18-
செம்மண் எடுத்து விற்றதில் கிடைத்த பணத்தை அமைச்சர் பொன்முடி இந்தோனேசியா நாட்டில் முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணை குறித்து அமலாக்கதுறை இயக்குநரகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பது வருமாறு…

சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் கே. பொன்முடியுடன் தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடவடிக்கைகளை அமலாக்கத்துறை கடந்த 17- ஆம் தேதி மேற்கொண்டது. அவரது மகன், கௌதம் சிகாமணி, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். சோதனை நடைபெற்ற இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.

சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி தனது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிதாரர்களுக்கு சட்டவிரோதமாக 5 இடங்களில் சிவப்பு மணல் அள்ளுவதற்கான உரிமம் வழங்கியதாக வழக்கு உள்ளது.
சட்டவிரோத சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட வருமானம் பினாமி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. மற்றும் பல பரிவர்த்தனைகள் மற்றும் கணக்குகள் மூலமும் பணம் கையாளப்பட்டு உள்ளது.

இறுதியில், இந்தோனேசியாவில் PT Excel Mengindo மற்றும் UAE இல் M/s யுனிவர்சல் பிசினஸ் வென்ச்சர்ஸ் FZE ஆகிய இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தோனேசிய நிறுவனம், பெயரளவுக்கு ரூ. 41.57 லட்சத்திற்கு விற்கப்பட்டது. பின்னர் 2022-ல் 100 கோடி ரூபாய் இந்த வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கு ஹவாலா மூலம் பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சோதனை நடவடிக்கையின் போது கணக்கில் வராத ரூ. 81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டு நாணயங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் பவுண்டுகள் பொன்முடி வீட்டில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புக்கு கிடைத்து இருக்கிறது.

விசாரணையைத் தவறாக வழிநடத்தும் வகையில், இந்தப் பணம் குடும்பத்திற்குச் சொந்தமான மருத்துவமனைக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டது. மேலும் பணத்தை அறிமுகப்படுத்த கணக்குப் பதிவேடுகளைப் பொய்யாக்கும் முயற்சியும் அமலாக்கத்துறையால் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டது.

எனவே, பொன்முடி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த விளக்கமறியாத பணத்திற்கு நம்பத்தகுந்த விளக்கம் எதுவும் இல்லை.

இந்தப் பணம் சொத்துக்கள் வாங்குவதற்கும் நிறுவனங்களைப் பெறுவதற்கும், பிற முதலீடுகளைச் செல்வதற்கும் பயன்படுத்தப் பட்டதற்கான தடயத்தை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது. பல்வேறு குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தவறான பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட 41.9 கோடி, அடையாளம் காணப்பட்டு இருக்கிறது . அது முடக்கப்பட்டு உள்ளது.
மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *