பொறியியல் படிப்புகளில் சேர 1. 86 லட்சம் பேர் விண்ணப்பம்..! கலந்தாய்வு ஜூலை.2ல் தொடக்கம்..!!

ஜூன்.5

தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1 ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவ-மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கவுள்ளது.

2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவை கடந்த மாதம் 5-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கிவைத்தார்.

முதல் நாளில் 8 ஆயிரத்து 668 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறைந்தது சுமார் 3 ஆயிரம் முதல் அதிகபட்சம் 16 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கிய விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.

அதன்படி, 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவ-மாணவிகள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியவர்கள் மட்டுமே விண்ணப்பித்ததற்கான கணக்கில் சேர்க்கப்படுவர். அதன்படி இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 209 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டில் 17 ஆயிரம் பேர் கூடுதலாக பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அவகாசம் அளிக்ககப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு நாளை நடைபெறுகிறது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன். 26-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

ஜூலை 2-ந் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவு மாணவ-மாணவியருக்கான கலந்தாய்வு 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தப்படும் துணை கலந்தாய்வில் நிரப்பப்படும். தொடர்ந்து எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி.க்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு அத்துடன் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *