வில்லனாவே நடிக்க ஆசைப்பட்டேன் – நடிகர் ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு

ஏப்ரல்.29

சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன் என்று என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருகமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு ஜெயந்தி விழா விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”உங்கள் அனைவரையும் பார்க்கும்போது அரசியல் பற்றி பேச தோன்றுகிறது. ஆனால் வேண்டாம் என்று அனுபவம் சொல்கிறது. ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது.

என்.டி.ஆரின் தாக்கம் என் மீது நிறைய உள்ளது. என் முதல் சினிமா பெயர் பைரவி. பாதாள பைரவி சினிமாவில் என்.டி.ஆர். நினைவுக்கு வந்து ஹீரோ கதாபாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டேன். 1977-ல் என்.டி.ஆருடன் டைகர் படத்தில் நடித்தேன். என்.டி.ஆர். துரியோதனன் கதாபாத்திரத்தை பார்த்து அதிசயித்து விட்டேன். அவரைப் போலவே நடித்து பார்ப்பேன். பிரதமர் மோடியை போல் சக்தி வாய்ந்த பிரதமரான இந்திரா காந்தியை எதிர்த்தவர் என்.டி. ராமராவ். அவர் ஒரு யுக புருஷன், பாலகிருஷ்ணா கண்பார்வையாலேயே எதிரியை கொன்று விடுவார். அவர் தூக்கி எறிந்தால் ஜீப் கூட 30 அடி தூரத்தில் எகிறி விழும். சல்மான் கான், ஷாருக்கான், ரஜினிகாந்த் அதுபோன்ற சண்டைக் காட்சிகளை செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை பாலகிருஷ்ணா செய்தால்தான் ஒத்துக்கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் பாலகிருஷ்ணாவை பாலகிருஷ்ணாவாக பார்க்கவில்லை. அவருக்குள் என்.டி.ஆர்-ஐ பார்க்கிறார்கள். அதனால்தான் அது போன்ற காட்சிகளை அவர் செய்தால் மட்டும்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

என்.டி.ராமராவினால் நான் இன்ஸ்பிரேஷன் பெற்றேன். அவரது பக்தி படங்கள் பலவற்றைப் பார்த்தேன். குருச்சேத்திரா நாடகத்தில் துரியோதனாக என்.டி.ஆர் மாதிரியே காப்பி அடித்து நடித்தேன். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நண்பர்கள் நீயும் சினிமா நடிகன் ஆகிவிடு. தெலுங்கில் ராஜினாலா, முக்காமலா மாதிரி பெரிய வில்லனாக வருவாய் என்று கூறினார்கள். அதுதான் நடிகனாக வேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்குள் உருவாக்கியது.

சிவாஜி, ராஜ்குமார், என்டி ராமராவ் போன்ற பெரும் நடிகர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன். ஏனென்றால் பத்து பதினைந்து நாட்களில் படத்தில் நடித்து முடித்து விடலாம். பணமும் கிடைத்துவிடும். ஹீரோ என்றால் அதிகமாக பொறுப்பு வரும் என்பதால் எனக்கு அதில் இஷ்டமில்லை. பைரவி பட இயக்குனர் எனக்கு ஹீரோ வேடம் கொடுப்பதாக கதை சொன்னபோது எனக்கு விருப்பமில்லை. ஆனால், படத்தின் பெயர் பைரவி என்று சொன்னவுடனே ஏற்றுக்கொண்டேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *