வெல்லப் போவது செந்தில் பாலாஜியா? அமலாக்கத் துறையா?

அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததால் சிறைக்கு கொண்டு செல்லப்படவில்லை. மேலும் பாலாஜியை சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அங்கு அவர் மாற்றப்பட்ட பிறகு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த வழக்கில் எட்டு நாட்கள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக் கொடுத்த முதன்மை நீதிமன்றம் அவரை வெளியில் கொண்டு சென்று விசாரணை நடத்தாமல் மருத்துவமனையிலேயே வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால் உடல் நிலையைக் கருதி அவரிடம் அமலாக்கத்துறை விசாணை நடத்தவில்லை. அந்த எட்டு நாள் காவல் நேற்றுடன் ( வெள்ளிக் கிழமை )முடிவடைந்து விட்டது. இதனை அமலாக்கத் துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து உள்ளார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம். அப்போது அவருடைய காவல் மேலும் 15 நாட்கள்  நீடிக்கப்படலாம்.

ஒரு வழக்கில் கைது செய்யப்படுகிறவரிடம் முதல் 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அதன் பிறகு விசாரணை நடத்தக் கூடாது என்பது குற்றவியல் சட்ட நடைமுறையாகும்.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையால் அவரிடம் இது வரை அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியவில்லை.எனவே ஜுன் 28 உடன் 15 நாள் காவல் முடிந்துவிடுவதால் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி  கொடுக்க வாய்ப்பு உள்ளதா  என்ற கேள்விதான் இப்போது அனைவராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாணை நடந்தது. அப்போது அவருடைய தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காவல் துறை போன்ற அமைப்புகளுக்கு கைது செய்யப்படும் ஒருவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறது. ஆனால் அமலாக்கத்துறைக்கு அது போன்ற அதிகாரம் இல்லை என்று வாதிட்டு இருப்பதும் பெரும் கவனத்தைப் பெற்று உள்ளது. இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணை வருகிறது. அப்போதுதான் அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவரும்.

அப்படி விசாரணை நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் சோதனைகளின் போது கிடைத்த ஆவணங்கள், மற்ற சாட்சிகளை ஆதராமாகக் கொண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கை நடத்தும்.

000

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *