மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை

June 06, 23

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது டெல்லி போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் வீட்டில் இல்லாத நிலையில் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக உ.பி.யின் கோண்டாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *