ஜூன் – 27
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருக்கிறார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து வரக்கூடாது என பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை, தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுக்குறித்து மதுரை சு.வெங்கடேசன் எம்.பி, தனது டிவிட்டர் பக்கத்தில், பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். தற்போது இதுகுறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.