ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அஜித்
நடித்துள்ள , ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் , நாளை ரீலீஸ் ஆகிறது.
இந்த படத்துக்கு தென்மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் ‘புக்’ செய்யப்பட்டுள்ளன. முதல் காட்சிக்கு எப்போதுமே ‘டிமாண்ட்’ இருக்கும்.
இதனால், மதுரையில் சில தியேட்டர்களில் முதல் ஷோவுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்க வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுப்பதால் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
. அதேசமயம் ‘மால்கள்’, அரசியல் செல்வாக்கு உடையவர்களின் தியேட்டர்களில் வழக்கம்போல் ரூ.190 வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது :
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரசிகர்களின் எதிர்ப்புக்கும், அரசின் நடவடிக்கைக்கும் நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும். இக்குழப்பத்தால் ஆன்லைன் முன்பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இன்று தியேட்டர் நடத்துவதும், ரசிகர்களை வரவழைப்பதும் எங்களின் ‘விடாமுயற்சியாக’ உள்ளது.
ஒரேமாதிரியான கட்டணம் நிர்ணயித்தால்தான் அனைத்து தியேட்டர்களும் ‘ஹவுஸ்புல்’ ஆகும்.
இல்லாத பட்சத்தில் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். ஓ.டி.டி., தளம், ஆன்லைனில் திருட்டுத்தனமான படம் பதிவேற்றம் போன்ற சவால்களை சமாளித்து போட்ட காசை, படம் வெளியான ஒருவாரத்தில்தான் லாபத்துடன் எடுக்க முடியும். இதை கருத்திற்கொண்டு தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் உரிய தீர்வு காண வேண்டும்.’என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.