இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மீது பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா, ஒரு புகாரை சொல்லி இருந்தார்.
‘ஏ.ஆர்.ரஹ்மான் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் இசை அமைத்து வருகிறார். இதனால், பாரம்பரிய இசைக்கலைஞர்கள் பலர் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை வைத்து தனி ஆர்கெஸ்ட்ரா அமைத்து இசையை உருவாக்க வேண்டும்’ என்று அபிஜித் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘அபிஜித்தை நான் பெரிதும் மதிக்கிறேன். இது அவரது தனிப்பட்ட கருத்து என்று நினைக்கிறேன். துபாயில் 60 இசைக்கலைஞர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். அதிலுள்ள அனைவருக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது.
நான் இசை அமைத்த ‘பொன்னியின் செல்வன்’, ‘சாவ்வா’ ஆகிய படங்களில் 200 முதல் 300 இசைக்கலைஞர்கள் வரை பணியாற்றியுள்ளனர். சில நேரங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். அது பாடலின் தேவையை பொறுத்து அமையும்.
இதுபற்றி நான் எந்தவொரு போட்டோவும் வெளியிட்டதில்லை என்பதால், இதுபற்றி பலருக்கு தெரியவில்லை. நான் எந்தளவுக்கு லைவ் இசைக்கலைஞர்களை பயன்படுத்துகிறேன் என்று, இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேட்டு பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.
—